Popular Posts

Friday, May 11, 2012

தனிமை !!


உரிமை  அல்லாவிடினும்...
எவரேனும் ,
உரையாட மாட்டனரா ??                                
என்ற எண்ணம் உதித்தது ஏனோ??
என் ஒற்றை உடமை ஆகிவிட்ட,
தனிமையின் குரலைக் 
கேட்டப்பின்னர் !! 
                     
                      -மாயா  
 

பூக்களாய் நான் !!



பூக்களாய்  நீயும் !!
வாசமாய் நானும் என்றாய் !!
வாசம் சேராமல்,
விட்டுச் சென்றாய் !!
இன்று  தான் உணர்கிறேன் !!
என்னைக் காகிதப் பூவென்று 
எண்ணி விட்டாயோ என்று !!

                             -மாயா
 

Wednesday, March 14, 2012

தாய்க் குரல்.!!



பசி என்று அழுகையால் அழைக்கிறாய் என்னை..
ருசி என்று பசியாற்ற பால் இல்லை என்னிடம்..

கைத்தட்டி விளையாட பொருள் கேட்கிறாய் கண்ணே..
பொருள் இல்லை நம்மிடம், பொம்மையாய் உன் அம்மா..

பாத்திரத்தில் சோறுண்ண பாக்கியம் இல்லென்றால் என்ன?
பத்திரமாய் உன்னைப் பொத்திவைக்க என்னிரு கைகள் உண்டு இங்கே..

குடி வளர்த்து உன் தந்தை நம் குடிசையை மறந்தான்..
நம் குடி வளர எந்நாளும் நீ குற்றம் அகன்று வாழாய்  மகனே..

களை எடுத்து உன்னைக் கரைசேர்க்க தாயுள்ளேன்..
கலைகள் பல பயின்று ஐயனாய் வழிகாட்டி வாழ்ந்திடு மகனே..
                                                                                       
                                                                                                     -மாயா



Tuesday, March 13, 2012

மரங்களை வெட்டுங்கள்!!




சமீபத்தில் ஒரு forward mail ல் வந்த விஷயம் உங்கள் பார்வைக்கு.....

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .

அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?

இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்..!
 நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!


Monday, March 12, 2012

தொலைந்த நாட்களின் , தொலையாத பதிவுகள் !!



சிறுகதை அல்ல. படித்ததில் பிடித்ததும் அல்ல.
இது, பிடித்த நேரங்களின் தொலையாத நினைவுகள்.
என்றும் தொடரும் காட்சிகளுக்கு எவரும் வாழ்வில் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
முன்னொரு நாள், நாம் தொலைத்த ஆசைகள் யாருக்காகவோ விட்டுக்கொடுத்த சொந்தங்கள் என்று முன்னம் நடக்கும் என்று நம்பி , நடந்திராத காட்சிகளைச் சுற்றியே நம் எண்ணங்கள் ஓடுகின்றன.
பிடித்த இடம், உடை, உணவு, நிறம், பொருள் என்று சதை இல்லாத அசையாதவைகள் மாறலாம்.
அனால் மனம், உணர்வு, உணர்ச்சி கொண்ட மனிதர்கள் கூட அந்தப் பட்டியலில் சேர்வதுண்டு.
அவன் எண்ணங்களும் , வளர்த்த கனவுகளும் கூட அவனுக்கே எதிர்ச்சொல்லாய் போவதுண்டு.
மனிதனைப் படைக்கயில், இயற்கை செய்திட்ட பிழையே இந்த எண்ணங்கள் என்று சில நேரம் தோன்றுவதுண்டு.
அடைமழைப்பின் கிளைகளின் இளைய தூரல்களாய் நினைவோரத்தில் சில காலங்களும் நிற்பதுண்டு. முற்றுப்புள்ளி இட்ட நம் எண்ணங்களும் பல நேரம் நம் நிம்மதியைத் தட்டிப்பார்க்க எட்டி வருவதுண்டு.
சூழ்நிலைக் கைதிகளாக நாமும் அவற்றில் சிக்கியதும் உண்டு.
முன்னொரு நாள் எவரோ கொடுத்த பரிசுப் பொருளைப் பாதுகாக்க அலமாரியை சுத்தம் செய்திருப்போம்.
அனால், அவர்களின் உறவினைக் கைவிட்டிருப்போம்.
அந்த இனிமையான கடந்தகாலமும் இன்று திரைப் பின்னால் கண்ணீர் சூழ மறைந்து விட்டதன் காரணம் என்னவோ, அவ்வுறவில் நம் கையாலாகாத் தனம் தான்.
கனமான சில நினைவுகளை எட்டாத மலையின் மேல் ஒழித்து விடவே எல்லோருக்கும் ஆசை.
எழுதுகோல் வைத்து பதிவுகளைப் பதித்த காலங்களின் மேல் அல்ல குற்றம்.
எண்ணங்களைக் கட்டுப் படுத்த தெரியாத மனதின் மேல் தான் குற்றம் வடிகிறது!
முனிவர்களின் தவங்கட்கு வரங்கள் தருவது இறைவன் என்றால், பல கோடி மனங்களில் தவமாய் புதைந்துக் கிடக்கும் குமுறல்கட்கு வரங்கள் தருவது யாரோ !! காலமோ??

                                                                                                           -மாயா